(57) குஹன் லக்ஷ்மணனைப் பார்த்து, ”நீ ராஜபுத்ரன், ஸுகமாயிருக்கத்தகுந்தவன், இந்தப் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்கு. நான் எல்லா க்லேசங்களையும் அநுபவிக்கிறவன். நான் வில்லுங்கையுமாய் என்னைச் சேர்ந்தவர்களுடன்கூட இருந்து ராமனையும் ஸீதையையும் ரக்ஷிக்கிறேன். உலகத்தில் ராமனைக்காட்டிலும் எனக்கு அதிக ப்ரியமானவன் ஒருவனும் இல்லை. நான் சொல்லுவது உண்மை. ஸத்யத்தின்மேல் ஆணை யிடுகிறேன் என்று சொன்னான். லக்ஷ்மணன், "நீ ரக்ஷிப்பது உண்மையே. இதில் எனக்குப் பயமில்லை. ஆனால், **ராமன் ஸீதையுடன் பூமியில் படுத்துத் தூங்குகையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?
[**ராமனைத் தசரதன் தபஸுபண்ணிப் பெற்றான்; அவன் தரையிலே படுக்கலாமோ? ராமன் வஸிஷ்டருடைய சிஷ்யனானபடியாலே கீழே உட்காருவதில் பழகினவன்; ஆகையால் அவன் தரையிலே படுக்கலாம். மிகவும் ஸுகமாக வளர்ந்த ஸீதை இப்படித் தரையில் படுக்கத் தகுந்தவளோ? இந்தக் கஷ்டங்களைப் பார்த்து எனக்குத் தூக்கம் வருமோ? வந்த தூக்கத்தைப்போக்க நான் ப்ரயத்னம் பண்ணவில்லை. தூக்கமே வரவில்லை – என்பது லக்ஷ்மணன் கருத்து.]
எனக்குப் பிழைத்திருப்பதிலோ, ஸுகத்திலோ ஆசையில்லை. எவனைத் தேவர்களும் அஸுரர்களும் சண்டையில் எதிர்த்து நிற்க அவன் ஸீதையுடன் புல்லில் படுத்திருக்கிறானே. இவன் காட்டுக்கு வந்தபிறகு ராஜா உயிருடன் இருக்கமாட்டார். அவரால் ரக்ஷிக்கப்பட்ட பூமி விதவையாகும். கௌஸல்யையும் ராஜாவும் என் தாயாரும் $$பிழைத்திருக்கக்கூடுமானால், இன்று ஓர் இராத்திரிதான் பிழைத்திருப்பார்கள்.
{$$இதற்கு வேறுவிதமாயும் அர்த்தம் பண்ணலாம் – "கௌஸல்யையும் அரசனும் எனது தாயாரும் இன்று ஒரு ராத்திரியாவது ஜீவித்திருப்பார்களா 2 ஆனால், நான் அப்படி எண்ணவில்லை" என்பது. இது ஸ்வாஸமான அர்த்தம். மேலே எழுதினது வியாக்யானத்தை அநுஸரித்தது.}
என் தாயார் சத்ருக்னனைப் பார்ப்பதற்காக ஒருகால் ஜீவித்திருக்கலாம். கௌஸல்யைக்கு ஒரே பிள்ளை. அவள் ராமனைப் பாராமல் இறந்தேபோய்விடுவள்" என்று சொன்னான். இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் இராத்திரி போய்விட்டது. (ஸ-51) பொழுதுவிடிந்தவுடன் ராமன் கட்டளைப்படி குஹனுடைய வேலைக்காரர்களால் ஓடம் கொண்டுவரப்பட்டது. ராமனும் ஸீதையும் லக்ஷ்மணனும் ஓடம் ஏற, கங்கையைக் குறித்துச் சென்றார்கள். ஸுமந்த்ரனும் கூடச் சென்றான். அப்பொழுது ராமன் ஸுமந்த்ரனைப்பார்த்து "ஸுமந்த்ரா! நீ திரும்பி ராஜாவினிடம் போ. ரதம் வேண்டாம். நாங்கள் காட்டுக்குள் கால்நடையாகப் போகிறோம்” என்று சொன்னான். ஸுமந்த்ரன் -" நீ ஒருவராலும் செய்ய முடியாத வேலையைச் செய்கிறாய். நீ மிகுந்த கீர்த்தியை அடையப் போகிறாய். நாங்களோ பாபிகள். கைகேயி வசமிருக்கப் போகிறோம்" என்று சொல்லிக்கொண்டே கூடச்சென்றான். அப்பொழுது ராமன் வெகுதூரம் வந்துவிட்டதையறிந்து, ஸுமந்திரன் அழுதான். அவனைப்பார்த்து ராமன் "என்னைப்பற்றி ராஜா எப்படித் துக்கப்படாரோ, அப்படிச்செய். கைகேயிக்குப் பிரியத்தைச் செய்ய அவர் எதைச் சொல்லுகிறாரோ, அதைச் செய்யவேண்டியது. அயோத்யைவிட்டுக் காட்டில் வஸிக்கிறோம் என்று நானாவது ஸீதையாவது லக்ஷ்மணனாவது துக்கப்படவில்லை. பதினான்கு வர்ஷம் முடிந்தவுடன் திரும்பி வரும் எங்களை நீர் பார்ப்பீர்’ என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்லு. என் தாயாரிடமும் மற்றத் தாயார்களிடமும் கைகேயியிடமும் ஸௌக்யமாயிருப்பதாகவும், அவர்கள் திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினதாகவும் சொல்லு. பரதனைச் சீக்கிரம் வருவித்து அவனை ராஜ்யத்தில் ஸ்தாபிக்கும்படி ராஜாவிடம்சொல்லு. ராஜாவினிடத்தில் நீ எப்படியிருப்பாயோ, அப்படியே எல்லாத் தாயார்களிடத்திலும் பேதம் பண்ணாமலிரு’ என்று பரதனிடத்தில் சொல்’ என்று சொன்னான். இதைக் கேட்டு ஸுமந்த்ரன் "நான் வெறும் உபசாரத்துக்காகச் சொல்லவில்லை. அன்புடன் சொல்லுகிறேன். உன்னிடத்தில் எனக்குப் பக்தி உண்டு. நான் சொல்லுவதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். உன்னை விட்டு எப்படி நான் நகரத்துக்குத் திரும்பிப்போவேன். உன்னை விட்டுவிட்டுத் திரும்பிவந்த ரதத்தைப் பார்த்து, அந்த ஊர் ஜனங்களின் மனது வெடிக்குமே. உன்னைவிட்டுப் பிரிந்த ஜனங்களின் வருத்தம் உனக்குத் தெரியுமே. ஆகையால் உன்னை விட்டுப்போக என்னால் முடியாது. வனத்தில் உன்னுடன்கூட இருக்கும்படி உத்தரவு கொடு. நான் சொன்னதைச் செய்யாமல் என்னை விட்டுவிட்டால், நான் அக்னிப்ரவேசம் செய்வேன்" என்று வேண்டினான். ராமன் "உனக்கு என்னிடம் இருக்கும் பக்தியை அறிவேன். எதற்காக உன்னைத் திருப்பி அனுப்புகிறேன், தெரியுமா? உன்னைப்பார்த்து கைகேயிக்கு நான் காட்டுக்குப் போய்விட்டேன் என்ற நம்பிக்கை உண்டாகும். அவள் ஸந்தோஷப்பட்டு ‘ராஜா பொய் சொன்னான் என்று நினைத்து அவரிடம் அவநம்பிக்கைக் கொள்ளமாட்டாள். நான் சொன்ன ஸமாசாரங் களை அவரவர்களுக்குச் சொல்லு" என்று அவனை ஸமாதானப்படுத்தி, தலைமயிரை ஜடையாகப் பண்ணிக் கொள்ள, ஆலமரத்தின் பாலைக் கொண்டு வரும்படி குஹனிடம் சொன்னான். அதைக் குஹன் கொண்டுவந்து கொடுத்தான். அந்தப் பாலால் ராமன் தன் தலைமயிரையும்,லக்ஷ்மணன் தலை மயிரையும் ஜடையாகப் பண்ணினான் ஸுமந்த்ரனுக்கும் குஹனுக்கும் விடைகொடுத்து, ஓடத்தில் ராமனும் மற்றவர்களும் ஏறினார்கள். கங்கையின் நடுவில் போகையில், ஸீதை அஞ்ஜலி பண்ணிக்கொண்டு, கங்கையைப் பார்த்து, "கங்கே! இவன் தசரத ராஜன்பிள்ளை. உன்னால் ரக்ஷிக்கப்பட்டுப் பிதாவின் பிரதிஜ்ஞையை நிறைவேற்றி, பதினான்கு வர்ஷம் காட்டிலிருந்து என்னுடனும் தம்பியுடனும் திரும்பி வருவன். அப்போது ப்ராம்மணர்களுக்கு லக்ஷம் கோக்களைத் தானம் பண்ணுகிறேன்; உனக்கும் உன் கரையிலிருக்கும் தேவதைகளுக்கும் தீர்த்தங்களுக்கும் தேவாலயங்களுக்கும் பூஜை செய்கிறேன் என்று பிரார்த்தித்தாள். பிறகு கங்கையின் தென்கரையைச் சேர்ந்து, ஓடத்தை அனுப்பிவிட்டு, கால்நடையாய் முன்னால் லக்ஷ்மணனும், நடுவில் ஸீதையும், கடைசியில் ராமனுமாகப் போனார்கள். (ஸ-52.)
You must be logged in to post a comment.