வால்மீகி ராமாயண சாரம் 20


(45) ராமனும் ஸீதையும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அங்கு முன்னாலே வந்திருந்த லக்ஷ்மணன், தமையன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு ஸீதையையும் அவனையும் பார்த்து ப்ரார்த்தித்தான்: "நீ காட்டுக்குப்போக நிச்சயம் பண்ணினால் நானும் வில்லுங்கையுமாய் உன்னுடன் வருவேன். நான் உன்னைவிட்டு இந்த உலகங்களின் ஐசுவரியத்தையும், ஆத்மாவின் அநுபவத்தையும், மோக்ஷநந்தத்தையும் வேண்டேன்" என்று. ராமன் இதை ஒப்புக்கொள்ளாமல் தடுக்க, லக்ஷ்மணன் முன்னாலேயே எனக்கு அநுமதி கொடுத்திருக்கிறாய் இப்போது ஏன் என்னைத் தடுக்கிறாய்? நான் உன்னுடன் கூடப் போக ஆசைப்படுகையில், என்னைத் தடுப்பதற்கு என்ன காரணம்? ஸந்தேஹமுண்டாகிறது" என்று கேட்டான். ராமன் ‘லக்ஷ்மணா! நீ என்னிடத்தில் ஸ்நேஹமுள்ளவன்; தர்மத்தில் பிரீதியுள்ளவன்; நீ வீரன்; எப்போதும் நல்லவழியிலிருக்கிறவன்; நீ எனக்கு ப்ரியமானவன்; என் பிராணனுக்கு ஸமமானவன்; நான் சொன்னபடி நடக்கிறவன்; எனக்குத் தம்பியாயும் தோழனாயு மிருக்கிறவன். நீ என்னுடன்கூட வந்தால், கௌஸல்யை
யையும் ஸுமித்ரையையும் எவன் ரக்ஷிப்பன்? ராஜா ரக்ஷிக்க மாட்டாரோ என்று கேட்கிறாயோ? அவர் காமபாசங்களாலே கட்டுப்பட்டிருக்கிறார். கைகேயியும் ராஜ்யத்தை அடைந்து ஸபத்நிகளுக்கு நல்லத்தைச் செய்யாள். பரதனும் ராஜ்யத்தை அடைந்து தாயார் சொன்னபடி நடக்கிறவனாய்,கௌஸல்யையை யும் ஸுமித்ரையையும் நினைக்கமாட்டான். ராஜாவின் அநுக்ரஹத்தாலோ அல்லது நீயாகவோ கௌஸல்யையை ரக்ஷி. நான் சொன்னதைச் செய். இப்படியிருந்தால் என்னிடத்தில் உனக்கு இருக்கும் பக்தியைக் காட்டினதாக ஏற்படும். பெரியோர்களுக்குப் பூஜை செய்வதாலே உயர்ந்த தர்மத்தையும் அடைவாய்" என்று பதில் சொன்னான். லக்ஷ்மணன்-“நீ எனக்கு இட்ட வேலையைப் பரதன் நல்லமனதுடன் செய்வன். இதில் ஸந்தேஹமில்லை. இஃது உன் தேஜஸாலேயே நடக்கும். என்னைப் போன்ற ஆயிரம் பேர்களையும் என் தாயாரையும் கௌஸல்யை ரக்ஷிப்பள். அவள் ஜீவனத்துக்கு ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. என்னை உனக்குச் சேஷனாகப் பண்ணு. அதற்குத் தகாததாக என்னிடத்தில் ஒன்றுமில்லை. நான் இயற்கையாகவே உனக்குச் சேஷன்.* நீ இயற்கையாகவே எனக்கு ஸ்வாமி. இதனால் என்ன ப்ரயோஜநம் என்று கேட்கிறாயோ? இருவருக்கும் ப்ரயோஜநம் உண்டு. உனக்கு ஆச்ரமத்தைக் கட்டி, காய் கிழங்குகளைக் கொண்டுவந்து கொடுத்து, மற்ற எல்லா வேலைகளையும் செய்வேன்; எனக்கும் உன் கைங்கர்யமாகிய ப்ரயோஜனம் கிடைக்கும்; இதுதான் சேஷனான நான் வேண்டுவது. வில்லையும் பாணங்களையும், மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக் கொண்டு வழியைக் காட்டிக்கொண்டு முன்னாலே போகிறேன். தபஸ்விகளுக்கு வேண்டிய பழங்களையும் கிழங்குகளையும் எப்போதும் கொண்டு வருகிறேன். நீ ஸீதையுடன் மலைச்சார்வுகளில் விளையாடு. நீ விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று மறுபடியும் வேண்டினான். இதைக் கேட்டு ராமன் ஸந்தோஷப்பட்டு லக்ஷ்மணன் கூடவருவதை ஒப்புக்கொண்டு, எல்லா ஆயுதங்களையும் கொண்டு வரச் சொன்னான். லக்ஷ்மணனும் அதை உடனே செய்தான்.(ஸ-31)

—————————————————————————–
* ராமன் பகவான் ; லக்ஷ்மணன் ஜீவன்; ஜீவனைப் பகவான் தன் பிரயோஜனத்துக்காகவே சேஷனாகப் பண்ணிக்கொண்டு கைங்கர்யத்தைப் பெறவேண்டியவன்; ஜீவனும் கைங்கரியத்தைச் செய்து கிருதார்த்தனாகிறான். இப்படி ஜீவன் பகவானை ப்ரார்த்திக்க வேண்டும் என்று லக்ஷ்மணன் உலகத்துக்கு வெளியிட்டான்.

——————————————————————————————————-

(46) பிறகு ராமனும் ஸீதையும் தங்களுடைய எல்லாத் தனங்களையும் குரு புத்திரரான ஸுயஜ்ஞருக்கும் மற்ற ப்ராம்மணர்களுக்கும் பரிவாரங்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்கள். (ஸ-32) பிறகு அவர்களும் லக்ஷ்மணனும் தசரதன் அரண்மனைக்குப் போனார்கள். வழியில் ஜனங்கள் அவர்களைப் பார்த்து வருத்தப் பட்டுக்கொண்டு அடியில் வருமாறு பேசிக் கொண்டிருந்தார்கள் – "எவன் போகும்போது சதுரங்கபலம் பின்னால் போகுமோ, அவன் கால்நடையாய்ப் போகிறானே. லக்ஷ்மணன் ஒருவன்தானே அவன் பின்னாலே போகிறான். எந்த ஸீதையை ஆகாசத்தில் ஸஞ்சரிக்கிறவர்களும் பார்க்கமுடியாதோ, அவளை ராஜமார்க்கத்தில் எல்லோரும் பார்க்கிறார்களே; நல்ல ரக்த வர்ணமுள்ள சந்தனத்தைப் பூசிக்கத்தகுந்தவளுக்கு மழையும் வெய்யிலும் குளிரும் வர்ணத்தின் வேறுபாட்டை உண்டுபண்ணப் போகின்றன. பிரியமான பிள்ளையைத் தசரதன் காட்டுக்கு அனுப்புவானோ? அவனுக்குப் பேய் பிடித்திருக்கவேண்டும். குணமில்லாத பிள்ளையையும் பிதா காட்டுக்கு அனுப்பமாட்டானே. எவனுடைய நடத்தையினால் இந்த உலகம் அவன் வசமாயிருக்கிறதோ, அவனை எந்தப் பிதா அனுப்புவான்? ராமன் எந்த வழியாய் போகிறானோ, நாமும் அந்த வழியாய் அவன் பின்னால் போவோம். சூன்யமான இந்த நகரத்தைக் கைகேயி பாலனம் பண்ணட்டும். எங்கே ராமன் போகிறானோ, அதுவே நகரம். நம்மால் விடப்பட்ட நகரம் வனமாகட்டும் " என்று ஜனங்கள் புலம்பினார்கள். இதைக் கேட்டுக்கொண்டு ராமன் மனது கலங்காமல் தகப்பன் அரண்மனைக்குச் சென்றான். (ஸ 33) தசரதன் கௌஸல்யை முதலான எல்லாப் பாரியைகளையும் வருவித்து வைத்துக்கொண்டு ராமனைக் கூப்பிடச் சொன்னான். தசரதன் உள்ளே வந்த ராமனைப் பார்த்து, அவனிடம்போக எழுந்திருந்துபோய், நடுவில் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். ராமனும் லக்ஷ்மணனும் அவனைத் தூக்கி ஆஸனத்தில் உட்காரவைத்தார்கள். ஒரு முகூர்த்தமான பிறகு, அவனுக்கு ப்ரஜ்ஞை திரும்பி வந்தது. அவனைப்பார்த்து ராமன், "எனக்கும் ஸீதைக்கும் லக்ஷ்மணனுக்கும் காட்டுக்குப்போக அனுமதி கொடுக்க வேண்டும் பல காரணங்களால் இவர்களைத் தடுத்தேன் ; அது முடியவில்லை" என்று வேண்டினான். தசரதன், "கைகேயிக்கு வரம் கொடுத்து ஏமாந்து போனேன். என்னை அடக்கிவிட்டு நீ அயோத்யைக்கு ராஜாவாயிரு" என்று சொன்னான். ராமன் அஞ்சலி செய்துகொண்டு, "நீர் ஆயிரம் வர்ஷங்கள் ராஜாவாக இரும். நான் காட்டில் வஸிக்கிறேன். எனக்காக நீர் சொன்னதைச் செய்யாதிருக்க வேண்டாம். பதினான்கு வர்ஷம் அங்கிருந்து ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றித் திரும்பிவந்து உம்முடைய திருவடிகளைப் பிடித்துக்கொள்ளுகிறேன்” என்று பதில் சொன்னான். அப்போது கைகேயியினால் தூண்டப்பட்ட தசரதன் மறுபடியும் "ஸுகமாயும் பயமில்லாததாயுமிருக்கிற மார்க்கத்தாலே போய்த் திரும்பிவந்து ச்ரேயஸையும் அபிவிருத்தியையும் அடை. தர்மத்திலும் ஸத்யத்திலும் மனதை வைத்திருக்கிற உன்னை அவைகளிலிருந்து திருப்ப முடியாது. ஆனால் இன்று ராத்திரி போகாதே; ஒரு நாளாவது உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னான். ராமன் "நான் ஒரு க்ஷணம்கூட இங்கே இருக்க முடியாது. துக்கத்தை அடக்கிக் கொள்ளும். கைகேயி என்னைக் காட்டுக்கு இப்போதே போ என்று சொன்னதை ஒப்புக்கொண்டு, ‘நான் போகிறேன்’ என்று சொன்னேன். அதை ஸத்யமாகப் பண்ணவேண்டும் " என்று பதில்சொன்னான். தசரதன் ராமனை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டு மூர்ச்சையை அடைந்தான். கைகேயி தவிர, மற்ற பார்யைகளும் ஸுமந்த்ரனும் உரக்க அழுது மூர்ச்சையை அடைந்தார்கள். (ஸ 34)

——————————————————————————
*
(1) லக்ஷ்மணன் தன்னைவிட்டுப் பிரியான் என்று ராமனுக்குத் தெரியும். ஸீதைக்கு உபதேசம் பண்ணுகையில் பரதனையும் சத்ருக்கனையும் கூடப்பிறந்தவர்களைப்போலவும், பிள்ளைகளைப் போலவும் பார் என்று சொன்னான். அப்போது லக்ஷ்மணனையும் அவர்களுடன் சேர்க்க வில்லை. இப்போது லக்ஷ்மணனைத் தடுத்தது, ஒருவனால் வேண்டப் படாமல் ஒன்றையும் செய்யக்கூடாது என்கிற தர்மத்தை வெளியிடுவதற்காக.

(2) பரதன் ஸ்வபாவத்தை ராமன் நன்றாய் அறிந்தவன்; ஆன போதிலும் லக்ஷ்மணன் அபிப்ராயத்தை அறிவதற்காக, பரதன் கௌஸல்யையைக் கவனிக்கமாட்டான் என்று சொன்னது.

(3) லக்ஷ்மணன் தன்னைக் காட்டுக்கு அழைத்துக்கொண்டுபோக ராமனையும் ஸீதையையும் வேண்டினான். இதனால், எந்த ப்ரயோஜனத்திற்கும் பகவானையும் லக்ஷ்மியையும் வேண்ட வேண்டும் என்பது விளங்குகிறது. பிரபத்தியிலும் இப்படியே.

—————————————————————————–

பின்னூட்டமொன்றை இடுக